அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிவராமின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்த ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
நினைவு தினத்தில் முதலில் தராகி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவான் மற்றும் மதகுருமார், சிவில் சமூக அமைப்பு, மூத்த ஊடகவியலாளர்களான சிவம் பாக்கியநாதன், அ.கங்காதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவுதின நிகழ்வில் ஊடகவியலாளர்களையும் அரசியல்வாதிகளையும் சிவில் உடையில் காணொளி பதிவுசெய்த புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது “கொழும்பிற்கு ஒரு சட்டமும் மட்டக்களப்பிற்கு ஒரு சட்டமா இருக்கின்றது என்று சாணக்கியன் கேள்வி எழுப்பியதுடன், ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்து அவர்களையும் கொலை செய்வதற்கா திட்டம் போடுகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.