உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாத 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு (MOE) அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்துத் தடைகள், தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் மின் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் செயலாளர்
மற்றைய பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

பாதகமான வானிலையால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று நாலக கலுவெவ தெரிவித்தார்.
அத்துடன் ஏதேனும் உயர்கல்வி நிறுவனம் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு மீண்டும் திறக்கும் திகதி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |