மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இ.தேவஅதிரன் தலைமையில் இன்று (31) மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றுள்ளது.
இதன் பொழுது படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரனும் சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவும் இணைந்து மலர் மாலை அணிவித்து நினைவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்
இதனையடுத்து இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய கலந்து கொண்டிருந்தோர் வேண்டும், வேண்டும், நீதிவேண்டும், ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும், ஊடக சுதந்திரம் வேண்டும், ஊடகங்களை அடக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கருத்துக்களையும் வெளியிட்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா. சிறிநேசன், முன்னாள்கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரை ரத்தினம், இ. பிரசன்னா, இலங்கை தொழில் சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடிகமஹே, சிரேஸ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


