ஐ.நாவில் 31 நாடுகள் இலங்கைக்கு பேராதரவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 அங்கத்துவ நாடுகளில் 31 நாடுகள் இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்துள்ள சாதக தன்மைகள் தொடர்பில் வரவேற்று பேசியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளன.
இலங்கை அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் அரசாங்கமாகும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இது மிகவும் சிறந்த முன்னேற்றமாகும்.
காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 14000இற்கும் அதிக முறைப்பாடுகள் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என எந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தாலும் அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவை இடம்பெற்றிருக்கின்றன. தென் மாகாணத்தில் 1980 களில் காணாமல் போனோரும் உள்ளனர். இதற்கிடையில் பல அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளன.
எனினும் இன்று எமது ஆட்சியில் அதற்கான உறுதியான தீர்வினை வழங்கி , பொறிமுறையொன்றை கட்டியெழுப்பி அதனை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளுக்குள்ளும் இது தொடர்பில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இதனை ஒரு கறுப்பு பகுதியாகப் பார்க்க நாம் விரும்பவில்லை. அவர்கள் இதனை தெரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” எனக் கூறினார்.
