அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
அதன்படி, இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் (17.11.2025) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளை தமிழக கடற்றொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
அத்துடன் ஏனைய 28 கடற்றொழிலாளர்களுக்கும்18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, 10 வருட கால பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் , கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டணையுடன் , 18 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்