மூதூர் - பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மூதூர் - பட்டித்திடல் கிராமத்தில் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தியதியன்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 பேருக்குமான 39ஆவது ஆண்டு நினைவேந்தல் முதல்முறையாக மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு, பல வருடங்களுக்குப் பின்னர் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இன்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நீதியோ, நிவாரணங்களோ கிடைக்கவில்லை
இதன்போது குறித்த படுகொலை இடம்பெற்று 39 வருடங்களாகியும் இதுவரை தமக்கு எந்தவித நீதியோ, நிவாரணங்களோ கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1987ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் யுத்த சூழல் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே இடம் பெற்றவண்ணம் இருந்தன. அந்தவகையில் 1987.04.26 அன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் பிரதான வீதியில் வைத்து கன்னிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். இதன் காரணமாக பயத்தில் பலர் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.
இதன்போது கிறிஸ்தவக் குடும்பமான பொன்னம்மா குடும்பத்தை சேர்ந்த பதினெட்டுப் பேர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் தங்களுக்கு எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் தங்கள் வீட்டில் இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
வீடுவீடாகத் தேடிக்கொண்டு வந்த ஆயுததாரிகள் இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் குற்றுயிரோடு இருந்தவர்களை வெட்டிவிட்டு அனைவரையும், குறிப்பாக குறை உயிரோடு இருந்தவர்களையும், வீட்டினுள் வைத்துத் தீயிட்டு படுகொலை செய்தனர்.
கன்னிவெடி தாக்குதல்
இதில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த பதினேழு பேர் உயிரிழந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பினர்.

குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் பிரதான வீதியில் வைத்து கன்னிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர் இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்பேதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார், இது தொடர்பாக மே மாதம் 5ஆம் திகதி இந்திய பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆயுததாரிகள் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் ஆயுததாரிகள் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர். பின்னர் பெண்களில் அவல சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர் ஆனால் ஆயுததாரிகள் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர். பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர் என்று அப்பெண் கூறினார்.
கடினமான சூழல் நிலவியது
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக கோணன் உலகநாதன் 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவ்வாறு விபரித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக எந்த தொழிலுக்கும் செல்ல முடியாமலும், எந்த தொழிலும் செய்ய முடியாமலும் மிகுந்த கடினமான சூழல் நிலவியது இதனால் சில தேங்காய்களை சைக்கிளில் கட்டி எடுத்துக் கொண்டு குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் மூதூர் சந்தையை நோக்கி புறப்பட்டேன். அங்கு சந்தையில் தேங்காய்களை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு மூதூர் தேவாலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வரும்வேளையில் எமது ஊரில் இராணுவம் புகுந்து எல்லோரையும் சுடுவதாக கேள்விப்பட்டேன்.
இதனால் அவசர அவசரமாக வாங்கிவந்த சாமான்களை வயல்வெளிக்குள் தூக்கி எறிந்துவிட்டு குறுக்கு வழியாக வீட்டைநோக்கிச் சென்றேன். எனினும் அங்கு இராணுவம் நிற்பதாகவும் அங்கே இப்போது செல்ல வேண்டாம் என ஊர்க்காரர்கள் மறித்தார்கள் இதனால் மதியம் 1 மணியளவில் வீட்டுக்குச் சென்றேன் அங்கு அனைவரும் சுட்டும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
அதனைப்பார்த்ததும் நானும் அந்த நெருப்பில் பாய்ந்து இறப்பதற்கு சென்றேன் என்னை ஊர் மக்கள் விடவில்லை. பின்னர் மறுநாள் காலை அனைவருடைய உடல்களும் எமது மயாணத்தில் பாரிய குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் நான் திருகோணமலையில் இருக்கும் மெதடிஸ்த திருச்சபைக்கு வந்து விட்டேன் அவர்கள்கள்தான் எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்கள்.
இராணுவத்தினர் ஒன்றும் செய்யமாட்டார்கள்
குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் காலை கன்னிவெடியில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள் இதனால் ஊர் மக்கள் எல்லோரும் காட்டுக்கு ஓடிவிட்டார்கள் எங்கள் குடும்பம் கிறிஸ்தவ குடும்பம் என்பதால் இராணுவத்தினர் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் மாத்திரம் ஓடாமல் வீட்டிலேயே இருந்தார்கள். ஏற்கனவே ஒரு முறையும் இராணுவத்தினர் வந்தபோது எனது அடையாள அட்டையை காண்பித்ததும் பார்த்துவிட்டு சென்று விட்டார்கள். அதனாலேயே எங்கள் குடும்பம் மட்டும் ஓடாமல் இருந்தனர் என தெரிவித்திருந்தார்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில்,
01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது06)
02. உலகநாதன் ஜெயரதி (வயது 01)
03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26)
04. கோணன் பத்தினியன் (வயது 42)
05. பத்தினியன் சீதையம்மா (வயது 34)
06. பத்தினியன் நேசன் (வயது 17)
07. பத்தினியன் பிரகாஸ் (வயது 13)
08. பத்தினியன் சோபனா (வயது 12)
09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10)
10. பத்தினியன் அற்புதராசா (வயது 08)
11. கோணன் பொன்னம்மா (வயது 60)
12. கோணன் மேரி (வயது 23)
13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29)
14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11)
15. சிந்தாமணி யோகராசா (வயது 14)
16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15)
17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்