டித்வா புயலுக்காக 50,000 கோடி ரூபாய் நிவாரணம் : மே தின உரையில் அநுர அறிவிப்பு
இலங்கையில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கியதாகவும், அவற்றில் ஒரு சதத்தையேனும் கடன் வாங்கியோ, புதிய நாணயத்தாள்களை அச்சிட்டோ வழங்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (01) இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடக்கு, கிழக்கு. தெற்கு மற்றும் மலையகம் அனைத்து பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர்.
உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம்
இலங்கையில் முதன் முறையாக உழைக்கும் மக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நாம் இரண்டு வகையான தீர்மானங்களை எடுத்துள்ளோம். ஒன்று மக்களுக்கானது மற்றொன்று ஆட்சியாளர்களின் வரப்பிரசாதங்களை நீக்குவது போன்ற தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இலங்கையின் முதன்முறையாக உழைக்கும் மக்களின் நோக்கத்தை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமாக உருவாகியுள்ளது.
டித்வா புயலினால் பெருந்தோட்டத்துறை சார்ந்த விவசாய நிலங்கள், விவசாய நிலங்கள் என்பன சேதமாகின. நாம் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்ற வகையில் அதிகளவான நிவாரணங்களை வழங்கினோம்.
எரிபொருள் விலை அதிகரிப்பு
அதேபோன்று உழைக்கும் மக்களுக்கான அரசாங்கம் என்பதாலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்தோம். இப்படிதான் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை ஸ்தாபித்தால் நன்மை கிடைக்கும்.

மத்திய கிழக்கு போர் சூழலில் எரிபொருள், உரம் என்பனவற்றின் விலைகள் அதிகரித்தது. மக்களின் நன்மைக் கருதி அதில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முன்வந்தது. அரசாங்கத்தின் ஸ்தீரதன்மை மக்களின் நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகள் தற்போது சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் தனித்தனியே கூட்டங்களை கூட்டி மே தினத்தில் கதைக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்தின் மே தின கூட்டத்தைப் போல் அரைவாசியாவது சேர்த்து காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றோம். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எமது கூட்டங்களில் அந்த நம்பிக்கையிலேயே இணைந்துள்ளனர்.
தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை
இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம்.

தமிழ் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே தமிழ் மொழி மூலமான கல்வியற்கல்லூரிகளில் அதிகளவான தமிழ் ஆசிரியர் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகின்றோம்.
பெருந்தோட்ட வீதிகள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களும், அரசாங்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கும் அரசாங்கமாக இது அமைந்துள்ளதால், மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எமது சேவை அமையும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |