நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்து : 5 பேர் ஆபத்தான நிலையில்!! (படங்கள்)
மஸ்கெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில், பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,
சிவனொளிபாதமலை யாத்திரையை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வாகனம், வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த வாகனத்தில் 12 பேர் பயணித்துள்ளனர், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாத்தறை, கோட்டேகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
விபத்து இடம்பெறும் போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்தார்.
யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ - பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள், வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





