இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் - பாராட்டும் காவல்துறை
தான் கண்டெடுத்த நகை பார்சலை காவல்துறையிடம் ஒப்படைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார் கணக்காளர் ஒருவர்.அவரின் இந்த செயலை காவல்துறை அதிகாரி பாராட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொனராகலை கல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம். லக்மால் தயாரத்ன என்பவர் மொனராகலை நகர சந்தைப் பகுதிக்கு அருகில் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க நெக்லஸ்கள், மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட தங்கப்பொதி

மொனராகலை நகரிலுள்ள நிதி நிறுவனமொன்றில் கணக்கியல் பிரிவில் கடமையாற்றும் இவர், நேற்று (21) பிற்பகல் தனது சொந்த தேவைக்காக நகரத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது, நகரின் கடையொன்றிற்கு அருகில் இந்த தங்கப் பொதி கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளார்.
உடனடியாக மொனராகலை காவல் தலைமையகத்திற்குச் சென்று பிரதான காவல்பரிசோதகர் P.S.C சஞ்சீவவைச் சந்தித்து அவர் அறிவுறுத்தலின் பேரில் பொருட்களை மொனராகலை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான இக்கட்டான நேரத்தில் லக்மால் தயாரத்னவின் செயற்பாடு முழு சமூகத்திற்கும் முன்னுதாரணமானது, உங்களின் சிறந்த செயலை நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம் என காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.