யாழ். அரியாலை கழிவு முகாமைத்துவ நிலைய விவகாரம் : நல்லூர் பிரதேச சபையின் அறிக்கை
அரியாலை கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுப்பொருட்கள் தொடர்ச்சியாக சேமித்து வைப்படமாட்டாது என்ற விடயம் மக்கள் மத்தியில் சரியாக சென்றடையுமானால் எந்தவொரு போராட்டத்தினையும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் நேற்றையதினம் (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தற்போது ஊடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சமூக மட்டத்திலும் ஒரு பேசுபொருளாக அரியாலை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையமும் அதில் சேகரிக்கப்படும் குப்பைகளும் மாறியுள்ளது.
அரியாலை பிரதேச வாழ் மக்கள்
குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது சொந்த மனஎண்ணங்களையும் சிந்தனைகளையும் பொதுக்கருத்துக்களாக சமூக வெளியில் தெரிவித்து எதிர்மறையான கருத்துருவாக்கங்களை உருவாக்கி ஒரு அமைதி குழப்ப நிலை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பிலான உண்மையான நிலைப்பாட்டினை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் சபை என்ற அடிப்படையில் எமக்குண்டு என்பதனால் இவ் ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.
அரியாலை பிரதேச வாழ் மக்களால் குறித்த கழிவு முகாமைத்துவ நிலையம் அமைப்பதற்கு எதிராக நடாத்தப்படும் அமைதிப்போராட்டங்களுக்கு நல்லூர் பிரதேச சபை மதிப்பளிக்கின்ற அதேவேளை மக்களின் மத்தியில் தவறாக சித்தரிக்கப்பட்ட விடயங்களை மக்களுக்கு தெளிவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பிரதேச சபைக்குண்டு.
உள்ளூராட்சி மன்றங்களின் மிகப் பிரதான செயற்பாடு கழிவகற்றல் முகாமைத்துவமாகும். அவ் கழிவு முகாமைத்துவத்தில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுதாராணமாக செயற்படவேண்டுமென்றும் மக்களின் சுகாதாரத்தினைப் பேணவும் பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருக்கவும் நல்லூர் பிரதேச சபை தன்னுடைய கழிவகற்றல் முகாமைத்துவத்தினை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றது.
குறித்த கழிவகற்றல் செயற்பாட்டின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் மற்றொரு மைல்கல்லாக இவ் கழிவகற்றல் முகாமைத்தவ நிலையத்தினை அமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை
குறித்த செயற்பாடுகளின் முதற்கட்டமாக பொருத்தமான ஒரு இடம் எமது பிரதேச சபையின் நியாயதிக்கத்தினுள் தெரிவு செய்து தருமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நல்லூர் பிரதேச செயலகத்தினால் முறையாக குறித்த திட்டத்திற்கு காணி ஒதுக்கப்பட்டது.
குறித்த காணியில் குறித்த கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளினால் ஏதாவது சூழல் மாசடையும் நிலை ஏற்படுமா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குறித்த செயற்றிட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் பிரஸ்தாபிக்கப்பட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியும் பெறப்பட்டு அதன் பின்னரே பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த கழிவு முகாமைத்துவ நிலையம் என்பது ஒரு கழிவுசேகரிக்கும் குப்பைமேடாக உருவாக்கப்பட கூடாது என்ற தூரநோக்கு சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டே இச் செயற்றிட்டம் பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டது.
பிரதேச வாழ் மக்களிடம் சேகரிக்கப்படும் கழிவுகளில் உக்கக்கூடிய மற்றும் உணவுப்பொருட்கள் சார்ந்த கழிவுகளைத் தவிர்த்து சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ரிக், பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளைச் சேகரித்து அவற்றினைத் தரம்பிரித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கொள்கைகளுக்கு அமைவாக உரிய பொறிமுறைகள் வாயிலாக குறித்த கழிவு முகாமைத்துவ நிலையத்திலிருந்து நாளாந்தம் அகற்றுவதே இங்கு இடம்பெறப்போகின்ற பொறிமுறையாகும்.
இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் எந்த ஒரு காலப்பகுதியிலும் பெறப்படுகின்ற கழிவுப்பொருட்கள் தொடர்ச்சியாக சேமித்து வைப்படமாட்டாது. குறித்த விடயம் மக்கள் மத்தியில் சரியாக சென்றடையுமானால் எந்தவொரு போராட்டத்தினையும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.
நவீன கழிவுமுகாமைத்துவ மையம்
இருப்பினும் தமது சொந்த அற்ப இலாபங்களுக்காக சில சமூக எதிர்ப்பாளர்கள் மக்களையும் மக்களுக்காக செயற்படும் பொது அமைப்புக்களையும் சமூகத்தின் கண்ணாடியாக செயற்படும் ஊடகங்களையும் தவறாக வழிநடாத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயத்திற்காக கழிவகற்றல் முகாமைத்துவ மையத்தினை ஒரு குப்பை மேடு உருவாக்கப்படுவதாக கருத்துருவாக்கம் செய்து அதனடிப்படையில் பல்வேறு வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
குறித்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானதும் சுயலாப அரசியலின்பால் மக்கள் மத்தியில் பரப்பப்படும் செய்திகளாகும் என்ற விடயத்தினை மக்கள் புரிந்து கொள்ள வேணடுமென நல்லூர் பிரதேச சபை மக்களிடம் இத்தால் கோருகின்றது.
நல்லூர் பிரதேச சபை காரைமுனங்கு கழிவுமுகாமைத்துவ மையத்தினை குப்பைகளைக் கொட்டி அதனை குப்பை மோடாக மாற்றுகின்ற செயற்பாட்டினை ஒருபோதும் செய்யவுமில்லை செய்யப்போவதுமில்லை.
மேலும் மக்களின் தெளிவுபடுத்தலுக்காக குறித்த இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட நடவடிக்கையாக இவ் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சேகரிக்கப்படும் அனைத்து பிளாஸ்ரிக், பொலித்தீன் , கண்ணாடி, கழிவுகள் ஒரு இவ்வாறன கழிவுகளை பாரியளவில் மீள்சுழற்சி செய்கின்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த இச் செயற்றிட்டத்தின் மூன்றாவது கட்டடமாக மேலைத்தேசய நாடுகளில் இவ்வாறான கழிவுப்பொருட்களினை பாரியளவில் மீள்சுழற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களைப் போன்ற உரிய அமைச்சுக்களின் ஊடாக கொள்வனவு செய்து இந் நிலையத்தில் பொருத்தி ஒரு நவீன கழிவுமுகாமைத்துவ மையமாக இதனை உருவாக்குவதற்குரிய பணிகளும் தற்போது எம்மால் முன்னடுக்கப்பட தொடங்கியுள்ளது.
மேலும் இக் கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குறித்த அரியாலை பிரதேசத்திலிருந்தே உள்வாங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து இயந்திர சாதனங்கள் பொருத்தப்பட அப்பகுதியிலிருந்து இன்னும் பல இப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான பிரேரணையும் இச் செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகளை சேகரிக்கும் பணி
இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் அப்பிரதேச கழிவுமுகாமைத்துவ நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை வேலைக்கு உள்வாங்கும் போது சூழல்பாதுகாப்பு என்ற விடயத்தில் முனைப்பாக இருக்கும் மக்கள் குறித்த செயற்றிட்டத்தினை சிறப்பாக செயற்படுத்தி அப்பிரதேசத்தினை தூயபிரதேசமாக வைத்திருப்பாளர்கள் என்ற தொலைநோக்குப் பார்வையினாலேயே ஆகும்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் ஊடங்களிலும் மற்றும் நேரடியாகவும் இவ் கழிவுமுகாமைத்துவ மையம் உருவாகுவதற்கு எதிராக கருத்துருவாக்கம் செய்யும் பலர் குறித்த பிரதேசத்தினைச் சாராதவர்களாகவும் பிரதேச சபையின் மீது தமது சொந்த காழ்ப்புணர்வினை வெளிப்படுத்துபவர்களாகவும் காணப்படுவதுடன் தமது சுயலாபத்திற்காக இப் பிரச்சினையில் அரியாலை வாழ் மக்களை கேடயமாக்கி கையிலெடுத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக குறித்த கழிவற்றல் நிலையத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு அவை எரியூட்டப்படபோகின்றது என்ற புனைகதைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.
பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் பிரதேச சபைக்குள்ள கழிவகற்றல்
பணிகளில் மருத்துவக்கழிவுகளை சேகரிக்கும் பணி பிரதேச சபைக்கு இல்லை என்ற
அடிப்படையான விடயத்தினையே மக்கள் மத்தியில் மறைத்து மக்களுக்கும் பிரதேச
சபைக்கும் இடையிலான நெருக்கமான உறவில் விரிசலினை ஏற்படுத்த பலர்
முயற்சிக்கின்ற விடயத்தினை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான சமூக விரோத சக்திகளை தம்மிலிருலுந்து வெளியகற்றி உங்களுடைய பிரதேச சபைக்கும் சூழல்பாதுகாப்பிற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என உங்களின் பணியாளர் என்ற ரீதியில் நல்லூர் பிரதேச சபை இவ் பகிரங்க கோரிக்கையினை முன்வைக்கின்றது.
அத்துடன் இக் கழிவகற்றல் நிலையம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எதுவித தயக்கமுமின்றி நேரடியாக பிரதேச சபையினை அணுகி தெளிவுபடுத்தல்களினை பெற்றுக் கொள்ள முடியும் என இத்தால் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
