ரணில் - பசிலின் பலமான ஆசை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் “சுதந்திர மக்கள் கூட்டமைப்பை” அழிக்க வேண்டும் என்ற பலமான ஆசை இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தற்போதைய அரசாங்கம் தோற்கடிக்கப்படும் எனவும் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கு “சுதந்திர மக்கள் கூட்டமைப்பு” எந்த வகையிலும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலை பிற்போட பல்வேறு காரணங்கள்

மக்கள் முன்வர அவர்கள் அஞ்சுவதால் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் பல்வேறு ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறுவதாக சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில, தேர்தலுக்கு பணமில்லை என அரசாங்கம் கூறுவதும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
கடந்த வருடம் நாளொன்றுக்கு 3 பில்லியன் ரூபாவை அச்சடித்த அரசாங்கம் தேர்தலுக்காக தன்னிடம் பணம் இல்லை என்றும் தேர்தலுக்கு சுமார் 2 நாட்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் பிரகடனப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கம்மன்பில இங்கு தெரிவித்தார்.
தேர்தலுக்கான நிதி உதவி

அத்துடன், தேர்தலுக்கு பணம் வழங்கும் சர்வதேச அமைப்புக்கள் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அந்த அமைப்புகளின் ஊடாக தேர்தலுக்கான நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.