வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் படுகொலை செய்யப்பட்ட நபர்- இராஜாங்க அமைச்சர் விளக்கம்!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன்னால் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்ட சம்பவத்தி்ல் நபர் ஒருவர் பலியாகியிருந்தார்.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும் நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.
எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நிலை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன். அத்துடன் இந்த விடயத்தில் எனது எந்த தனிப்பட்ட
விதமான பகையோ, கட்சி சார்ந்த அரசியலோ, இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.