செம்மணியில் கொடூரம் குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்
செம்மணி மனித புதைகுழியில் குவியலாக 08 என்புக்கூட்டு தொகுதிகள் இன்றைய தினம்(04) அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் புதைகுழியினுள் பிறிதொரு பகுதியில் இரண்டு என்புக்கூடுகள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழியின் மற்றுமொரு இடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரண்டு என்புக்கூடுகளுக்கு மேலாக ஒரு என்புக்கூடும் , ஒரு என்புக்கூட்டின் தோள்பட்டை பகுதியுடன் தொடுகையுற்றவாறு மற்றுமொரு என்புக்கூடும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவை இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகள்
கடந்த 2ஆம் திகதி ஒரு என்புக்கூட்டு தொகுதியின் தோள்பட்டையுடன் தொடுகையுற்ற நிலையில் மற்றுமொரு என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , 29ஆம் திகதி ஒரு என்பு கூட்டு தொகுதியின் மார்பு பகுதியில் ஒப்பீட்டளவில் சிறிய என்பு கூடொன்றின் மண்டையோட்டு பகுதி காணப்பட்டவாறு இரு என்பு என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , நாளை மறுதினம் சனிக்கிழமையுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நிறைவுறுகின்றன.
நீதிமன்றின் உத்தரவு
அதேவேளை அகழ்வு பணிகளுக்காக மேலும் 08 வார கால பகுதி தேவை என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையில் , அதற்கான பாதீடுகளை தயாரிக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
