வடக்கு கிழக்கு இணைவுக்கு எதிராக ரணில் தீவிரசெயற்பாடு - தமிழர் தாயகத்தின் குடிசார், மதத்தலைவர்கள் கண்டன அறிக்கை
தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில், தைப்பொங்கல் தினத்தன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அமைதிவழிப் பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், தாயக நிலத்தைப் பாதுகாக்க தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் அணிதிரள வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், குடிசார் சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன கூட்டு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளன.
அமைதிவழிப் பேரணி மீதான தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் தின நிகழ்வில் பங்கேற்ற சிறிலங்கா அதிபருக்கு எதிராக யாழ். பல்கலைகழக மாணவர்களால் அமைதிவழிப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட வயோதிப தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்களை சிறிலங்கா காவல்துறையினர், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதுடன் நீர்த்தாரைப் பிரயோகத்தையும் அவர்கள் மீது மேற்கொண்டிருந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், குடிசார் சமமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன கூட்டு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளன.

தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது எமது நீண்டகால கோரிக்கைகளான, சிறிலங்காவின் ஆயுத படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும்.
இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளினை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதாக அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
சிங்கள பேரினவாதம் தொடர்ச்சியாகவே வெளிப்படுத்தும் அதன் கோர முகத்தினையும், ரணிலின் உண்மை முகத்தினையும் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரணிலின் தமிழ் தேசிய சிதைப்பு

தாயகமான வட கிழக்கைத் துண்டாடுவதிலும், தமிழ் தேசியத்தைச் சிதைப்பதிலும் மும்முரமாகச் செயற்படும் சிறிலங்கா அதிபரின் ராஜதந்திரத்தினை முறியடித்து, தாயக நிலத்தைப் பாதுகாக்க தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் அனைவரும் ஓரணியில் அணிதிரள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் நல்லை ஆதீன குருக்கள், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, அகத்தியர் அடிகளார், யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் பத்திநாதன் ஜெபரட்ணம், வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்களான ஜோசப் மேரி, கந்தையா ஜெகதாஸ், ரொபேர்ட் சசிகரன், செபமாலை பிரின்சன்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி, குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் கோமகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தர்சன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
கண்டன அறிக்கை
