வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம் : எம்.பிக்களின் பிரதிநிதிகள் வெளிநடப்பு!
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த நபர்களின் குறுக்கீடு காரணமாக குழப்பம் ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் இடைநடுவில் வெளிநடப்பு செய்திருந்தனர்.
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு கடற்படை தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களை தேடும் நடவடிக்கையில் முன்னேற்ற நிலையினை எட்டியிருக்க முடியும் எனவும் பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதே மேற்குறித்த குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் வியாழக்கிழமை (04) இடம்பெற்றிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்டோர்
இதன்போது பருத்தித்துறை நகர பிதா வின்சன்ட் டீ போல், வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் நா.பத்மநாதன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உ.யுகதீஸ், உப தவிசாளர் சிறீகாந்தன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பருத்தித்துறை, வல் வெட்டித்துறை நகர சபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்பவற்றின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள். திணைக்களங்களின் பிரதிநிதிகள், காவல்துறை, இராணுவ அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது காணாமல் போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணியில் கடற்படையினரது பங்குபற்றுதல் தொடர்பில் விளக்கமளித்த பருத்தித்துறை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்பட்டமை தேடுதல் நடவடிக்கையின் போது சவாலாக இருந்ததாக கூறியிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கருத்தை மறுத்து பதிலளித்திருந்தார்.
கடற்றொழிலாளர்கள் மாயம்
அதன்படி, எமது கடற்றொழிலாளர்கள் சாதாரண படகில் சென்று இந்த கடற்கொந்தளிப்புக்கு மத்தியில் தேடுதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் எமது மக்களுக்கு ஒரு நெருக்கடி வரும் போது கடற்படையால் உரிய முறையில் செயற்பட முடியாதென்றால் அவர்கள் எங்கள் மண்ணில் இருப்பதில் அர்த்தமில்லை.
ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட காரணங்களினால் எங்கள் கடல் வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் சுடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்ர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடவில்லை. அவர்கள் தேடியதை தாம் கண்ணால் காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட உள்ளூர் கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர்.
ஆனால் கடற்படை தேடியது என இங்கு சொல்லப்படுவது. இந்த நிலை மிக வேதனையானது. உடனடியாக கடற்படை செயற்பட்டிருந்தால் அவர்களை கண்டுபிடித்திருக்கலாம்." என அவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பு குழு தலைவர்
இதே கருத்தை அப்பகுதி கடற்றொழிலாளர்களும் தெரிவித்ததாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெ.ரஜீவன் ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளர் குறுக்கிட்டு கடற்படையினர் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

அதற்கு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் முதல் நாளில் இருந்து நடந்தவற்றை கூற முற்பட்ட போது அனுமதி பெறாத ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர் குறுக்கீடு செய்திருந்தார்.
அதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பிரதேச செயலாளரது தலையீட்டில் நிகழ்வுகளை தொடர்ந்து யாரும் பதிவு செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் கடற்படையினர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் ஏனையவர்களை பேசவிடாது குறுக்கீட்டினை மேற்கொண்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரது பிரதிநிதிகளாக பங்கேற்றிருந்த செ.கஜேந்திரன், கு.தினேஸ் ஆகியோர் இடைநடுவே வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாகிய பொன் சிவகுமாரன் 22 மணி நேரம் முன்