சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை : பௌத்த சாசன அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
யாழ். தையிட்டியில் தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் பௌத்தசாசன அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி குறித்த விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சி
இந்த விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களுக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்தவிவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் தற்போது விகாரையை நிர்வகிப்பதுடன் தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன. அதில் பௌத்த மதகுரு ஒருவர் தங்கியுள்ளார்.
நிர்வகிக்க முடியாமல் திணறும் பாதுகாப்பு அமைச்சு
பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், இந்த பெயரில் விகாரை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு நிலம் மட்டுமே உள்ளது. மேலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த விகாரைகளை நிர்வகிக்கின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, இராணுவத்தினால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால் அதற்கு தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் காணியில் அமைக்கப்பட்ட குறித்த விகாரையை அகற்றக்கோரி கடந்த இரண்டு நாட்களாக மக்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)