இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை : அநுர அரசு அதிரடி தீர்மானம்
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்குப் பணிப்புரை
மேலும், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க "மிதுரு பாசல" திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |