சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - விவாதம் தொடர்பில் நாடாளுமன்றில் தீர்மானம்
சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்தக் குழு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வழமை போன்று இந்த வாரமும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
சுகாதார அமைச்சருக்கு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று (09) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்றைய நாள் அமர்வு

இதேவேளை, இன்று(10) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இந்த ஒத்திவைப்பு வேளை விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதனில், பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்த விவாதத்தின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.