நாளை மாலை கரையைக் கடக்கவுள்ள தாழமுக்கம் : வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகியவற்றுக்கு இடையில் இலங்கைக் கரையை ஊடறுத்துச் செல்வதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 250 கி.மீ தொலைவில் இந்த தொகுதி நிலை கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கை
அதன்படி, கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர், இன்று (08) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று வடகிழக்குத் திசையிலிருந்து வீசும்.
காற்றின் வேகம் மணிக்கு (35-45) கி.மீ அளவில் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (60-70) கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் (2.5 – 3.5) மீற்றர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இந்தத் தாழமுக்கமானது தற்போது நாட்டின் கிழக்குக் கரையோரப் பகுதியான பொத்துவிலுக்குத் தென்கிழக்கே சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தாழமுக்கம் கரையை நெருங்கி வருவதால், மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
பொத்துவிலுக்கு 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழமான தாழமுக்கம்
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இன்று (08) காலை ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வானிலைத் தொகுதி தற்போது பொத்துவிலுக்குத் தென்கிழக்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன், அடுத்த சில மணித்தியாலங்களில் இது கிழக்குக் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகமான பலத்த மழை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் இதர கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 23 மணி நேரம் முன்