டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு
டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறை சார்ந்த ஏனைய தரப்பினர் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா இலக்கம்
2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ள இந்த டிஜிட்டல் அட்டைகள் மூலம், காப்புறுதிச் சான்றுகளை இனி டிஜிட்டல் அட்டையாகவோ அல்லது காப்புறுதி நிறுவனங்களின் கைபேசி செயலி மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் கோரிக்கையின் அடிப்படையில் அச்சுப் பிரதியினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமையானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்புடன்' இணைக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினரும் பொதுமக்களும் வாகனக் காப்புறுதியின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 1338 என்ற கட்டணமில்லா இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1338# என்ற USSD குறியீடு, 1338 என்ற எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி அல்லது நேரடி அழைப்பு மூலம் காப்புறுதி விபரங்களைச் சரிபார்க்க முடியும்.
அச்சுப் பிரதியிலான சான்றிதழ்கள்
வாகன இலக்கங்களை உள்ளிடும் போது இடைவெளிகள் இன்றி பதிவிட வேண்டும் எனவும், "ஸ்ரீ" (ශ්රී) குறியீடு கொண்ட வாகனங்களுக்கு ஆங்கிலத்தில் 'SRI' எனப் பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மே 1 முதல் புதிய காப்பீடுகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டாலும், அதற்கு முன்னர் வழங்கப்பட்ட அச்சுப் பிரதியிலான சான்றிதழ்கள் அவற்றின் காலாவதித் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |