கையறு நிலையில் மைத்திரி தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்ற கட்சியின் தீர்மானத்தை மீறும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்சி உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் கட்சியின் தீர்மானத்தை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள், உரம், மருந்து, எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் நியமிக்கப்படும் எனவும், அதனால் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படி இல்லாமல் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவியேற்றால் சர்வகட்சி அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் எனவும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அந்த அரசாங்கத்தையும் மக்கள் எதிர்க்க முடியும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை மீறுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் கட்சியின் மத்திய குழு கூடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமால் சிறி பால டி சில்வா அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவியை பெற்றுள்ளதுடன் மேலும் ஐவர் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.