இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின் கட்டண அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
மின் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த ஆணைக்குழு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது.
கட்டண உயர்வுக்கான முக்கிய காரணம்
இதன்படி, மின்கட்டணங்களை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து, தேசிய முறைமைச் செயற்பாட்டாளர் நிறுவனம், திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை ஏப்ரல் 27ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதே கட்டண உயர்வுக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்க எழுத்துப்பூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு புதிய கட்டணங்கள்
இந்த ஆண்டுக்கான மின்கட்டண உயர்வு நாட்டின் 95 சதவீத மின்நுகர்வோருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மின் பயன்பாட்டில் 0 முதல் 180 அலகுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு எந்த கட்டண உயர்வும் விதிக்கப்படவில்லை.
ஆனால், 181 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு புதிய கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி 210 அலகுகளுக்கு பயன்படுத்தும் மின்சார நுகர்வோருக்கான தற்போதைய கட்டணமான ரூ. 9,570, - ரூ1,760 அதிகரித்து - ரூ. 11,330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மின் கட்டணம் ரூ. 2,660 அதிகரிக்கும்
240 அலகுகளுக்கு பயன்படுத்துபவருக்கான தற்போதைய கட்டணமான ரூ. 12,120, - ரூ. 2,210 உயர்த்தப்பட்டு, புதிய கட்டணம் ரூ. 14,330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

270 அலகு மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கான மின் கட்டணம் ரூ. 2,660 அதிகரிக்கும் என்றும், 300 அலகு மின்சாரம் பயன்படுத்தும் ஒரு நுகர்வோருக்கான கட்டணம் ரூ. 3,110 அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |