மகிந்தவின் மைத்துனருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மனைவி சிரந்தி ராஜபக்சவின் (Shiranthi Rajapaksa) சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க (Nishantha Wickramasinghe) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் (CIABOC) அவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்தல்
கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ஜனவரி 22, 2014 அன்று மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்காவிற்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த UL319 விமானத்தின் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் நிதி இழப்பை ஏற்படுத்தியிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டது.
அத்துடன் ஜனவரி 26, 2014 அன்று மாலைதீவிலிருந்து வந்து UL563 விமானத்தில் பிரான்சுக்குச் செல்லவிருந்த 75 பயணிகளை இறக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 19,160 அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
