கட்சியை களங்கப்படுத்தவே பொய்ப்பிரச்சாரங்கள் : செல்வம் எம்.பியின் குரல் பதிவு தொடர்பில் ரெலோ பேச்சாளர்!
தமது கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று (09.11.2025) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமைகுழு கூட்டம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”எமது தலைமைகுழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அது தொடர்பில் இன்று ஆராய்ந்திருந்தோம். எங்கள் கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாக திட்டமிட்டு எங்கள் கட்சியின் மீது சேறு பூச வேண்டும் என்று அல்லது அரசியல் ரீதியாக எங்களை தாக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ஊடாகத்தான் இந்த விடயம் பிழையான ஒரு பிரசாரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது உண்மை இல்லையா என்பதை ஆராய்வதற்காக தலைமைக்குழுவிலே ஒரு முக்கியமான குழு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் இந்த விடயங்களை ஆராய்ந்து பேராளர் மாநாட்டிலே இது சம்பந்தமான வெளிப்படுத்தலை மேற்கொள்வார்கள்.
அத்துடன் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன” என தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |