சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த திபெத்திய மாணவர்கள்
கிழக்கு ஆசிய நாடான திபெத் நாட்டு எஸ்.எஃப்.டி.(SFD) எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பு சீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1950-ஆம் ஆண்டு திபெத் நாட்டை தன்னுடன் இணைத்துள்ளதாக சீனா அறிவித்திருந்தது, ஆனால் அந்நாட்டின் விடுதலைக்காக ஆங்காங்கே அந்த நாட்டு மக்கள் எதிர்ப்புகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.
தற்போது இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜி20 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாட்டில்,பல உறுப்பு நாடுகளின் தலைவர்களும் டில்லி வந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
காலனி ஆதிக்கம்
இந்நிலையில், உலக தலைவர்களுக்கு அவர்களின் விடுதலை போராட்டம் குறித்து அறிவிக்கும் விதமாக எஸ்.எஃப்.டி.(SFD) எனும் சுதந்திர திபெத்திற்கான மாணவர்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா நகரத்திற்கு வெளியே மெக்லியாட் காஞ்ச் எனும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"எங்கள் கலாசாரத்தையும், அடையாளங்களையும் அழிக்கும் விதமாக சீனா தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது,4-வயது குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து சீனாவின் உறைவிடப் பாடசாலைகளில் வலுக்கட்டாயமாக சேர்த்து அந்த குழந்தைகளிற்கு சீனக் கலாசாரத்தை புகட்டுகிறார்கள், இதனால் காலப்போக்கில் அந்த குழந்தைகள் எங்கள் மொழி, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை மறந்து சீனர்களாக வாழத்தொடங்கி விடுகிறார்கள்" என்று அந்த அமைப்பின் இயக்குனர் டென்சின் பசாங்க் கூறினார்.
"ஜி20 தலைவர்கள் இது குறித்து பேச வேண்டும், சீனாவின் காலனி ஆதிக்க மனப்பான்மையுடன் சீனப் பாடசாலைகளில் திபெத்திய குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகத் தலைவர்கள்
திபெத் முழுவதிலும் சீனா அரங்கேற்றிவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து உலகத் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கோரினார்கள்.
எங்கள் நாடு, எங்கள் கலாச்சாரம் என்று சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நாம் வாழ வழி செய்து தரக்கோரி அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் குழு இன்று (09) போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

