பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுக - கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து
நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டமே கட்டமைப்பு ரீதியான பிரச்சனையாக காணப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்சனை. பயங்கரவாத தடைச்சட்டம் எதேச்சையான கைதினை அனுமதித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சடத்ததை அகற்றாமல் வேறு எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அநீதி மற்றும் எதேச்சையான கைது தொடரத்தான் போகின்றது.
அனைத்துலக சமூக மற்றும் அரசியல் உரிமை சட்டம் இலங்கையில் இருக்கின்றது. ஆனால் அது முற்றுமுழுதாக எதிர்மறையான விடயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்த் தரப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து பேசுகின்ற போது அவர்களை விடுதலைப்புலிகளாகவும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவும் தென்னிலங்கை சித்தரிக்கின்றது.
ஆகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டததின் தன்மை குறித்து ஆராய வேண்டும்.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.