அரச உத்தியோகத்தர்களுக்கு பறந்த உத்தரவு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு அதனாலேற்பட்ட மின் வெட்டு காரணமாக பலரும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி, அரச நிறுவனங்களில் A/C பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்காக வழங்கப்படும் மேலதிக எரிபொருள் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகித்தல். மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய உச்சபட்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணித்தல்.
பிற்பகல் 2.30 முதல் பி.ப 4.30 வரை A/C செயற்பாட்டை இடைநிறுத்தல்.
காலை வேளையில் வெளிப்புறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிப்புற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
