வாகனங்களின் புதிய விலைகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு காரணமாக வாகனங்களின் விலைகள் 150 வீதத்தால் அதிகரிக்கும் என பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பானது பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணவும், வெளிநாட்டு கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்கவும் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் கட்டணமென அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தவறான புரிதல்
எனவே தனிப்பட்ட பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், முடிந்தவரை அதனை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது வாகன இறக்குமதிக்கான வரி 130 வீதமாக உள்ள நிலையில், புதிய திருத்தம் குறித்து பொதுமக்களிடையே தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2026 மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LC) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என்றும், அவை பழைய வரி வீதத்தின் படியே மதிப்பிடப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வரவிருக்கும் நாட்களில் வாகனங்களின் விலைகள் உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அவசரமாக வாகனங்களை கொள்வனவு செய்ய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள பிரதி அமைச்சர், இவ்வாறான வதந்திகளை சிலர் தங்களின் வியாபார உத்தியாக பயன்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |