ஜனவரியில் வெளிவரவுள்ள முக்கிய திட்டம் - எதிர்க்கட்சி எம்.பி அறிவிப்பு
நாடு விரைவில் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தில் உள்ளதாகவும், நாட்டைக் காப்பாற்றி முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka)தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளுக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இத்தருணத்தில் செய்ய வேண்டியது, பொது வேட்பாளர்கள் பற்றி பேசாமல், தற்போதுள்ள நிலைமையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும். கடன் நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்த நாட்டுக்கான பொதுவான திட்டத்தை ஜனவரி மாதம் முன்வைப்போம் என நம்புகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல மிகவும் தாமதமானது. அரசாங்கம் காட்டுவதை விட பொருளாதார நெருக்கடி மோசமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் நிதி ஆலோசகர்களை நியமிப்பார்கள். எமக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்து கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
அப்படியானால், ஒரு நாடாக நாம் திவால்நிலையை ஏற்க வேண்டியிருக்கும், அது உறுதிப்படுத்தப்படும். ஒரு நாடு திவாலாகும் பட்சத்தில் அந்நாட்டை பல தசாப்தங்களாக காப்பாற்ற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.