பெலரூஸில் கலப்பு நவீன யுத்தம்!! மேற்குலக நாடுகளின் புதிய வியூகம்?
தமது நாட்டிற்கு எதிராக கலப்பு நவீன யுத்தத்தை (hybrid modern war) மேற்குலக நாடுகள் ஆரம்பித்துள்ளதாக பெலரூஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகசென்கோ தெரிவித்துள்ளார்.
தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையீடு செய்வதாகவும் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான விமானத்தை குண்டு புரளியை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக திசைதிருப்பிய பெலரூஸ் அதிகாரிகள், அதில் பயணித்த ரோமன் புரொட்டாசெவிச் மற்றும் அவரது காதலியான ஷபீ ஷபீயகா ஆகியோரை கைதுசெய்திருந்தனர்.
பயங்கரவாத பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் சக பயணிகளிடம் ரோமன் புரொட்டாசெவிச் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பெலரூஸ்சில் உள்ள ஏனைய அரசியல்கைதிகளை விட ரோமன் மிக ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் சகாவான ஸ்டீபன் புட்டிலோ கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பெலரூஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன்பின்னர் இடம்பெற்ற எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்கள் மீதான அடக்குமுறை குறித்து ரோமன் புரொட்டாசெவிச் அறிக்கையிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெலரூஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூகசென்கோ, குண்டு அச்சுறுத்தலின் அடிப்படையில் குறித்த விமானத்தை திசைதிரும்பிய சம்பவத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையீடு செய்வதாகவும் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காணப்பட்ட குறித்த விமானம் தமது நாட்டின் அணு திட்டத்திற்கு மேலாக பறந்துகொண்டிருந்த போதே திசை திரும்பியதாகவும் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க முடியும் எனவும் அலெக்ஸாண்டர் லூகசென்கோ கூறியுள்ளார்.
எனினும், நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுவதால் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகசென்கோ பீதி அடைந்துள்ளார் என எதிர்க்கட்சி சார்பில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள ஊடகத்தின் துணை ஸ்தாபகரான ஸ்டீபன் புட்டிலோ குறிப்பிட்டுள்ளார்.