அதிபராக தெரிவானால்..!! எதிர்கால செயல்திட்டத்தை வெளியிட்ட அநுர
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ரத்துச் செய்து, நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று அதிபர் தேர்தல் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், செயல்திட்டத்தை வெளியிட்ட அவர், தனது எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த செயல்திட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்கால செயல்திட்டம்

தாம் அதிபராக தெரிவானால், அமைச்சரவையை அதிகபட்சமாக 10 பேராக மட்டுப்படுத்துவதுடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவு பெறப்படும்.
தனது தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் கீழ் அதிபர், அமைச்சர்கள், தலைவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே ஒதுக்கப்படும்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், ஒக்டோபர் மாதம் தொடங்கும் பருவத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெறவும், பணவீக்கம் மற்றும் வருமான இழப்பு காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமைக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கவும், சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தவும் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரவும் உடன்பாடு எட்டப்படும்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்பதுடன், சர்வதேச ஆதரவைப் பெறவும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தால் வாபஸ் பெறப்பட்ட ஊழல் வழக்குகளை மீளாய்வு செய்து அவற்றை மீண்டும் விசாரணை செய்யும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ள வழக்குகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு மூலம் மீண்டும் தாக்கல் செய்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்னர் இடைக்கால அரசாங்கம் அமையுமா

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ, தெரிவு செய்யப்பட்ட பின்னர்இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்னர் இடைக்கால அரசாங்கத்தை அவர்கள் அமைப்பார்களா? என்பதை வெளிப்படுத்துமாறும் அநுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரிவுக்கும் பொதுச் செயலாளர் பிரிவுக்கும் இடையிலான போட்டிக்காகவே, ரணிலும், டலசும் போட்டியிடுகின்றனர்.
எனவே, ஏன் வேட்புமனுவை தாம், திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஒரு பொதுத் திட்டத்திற்கு ஒருமித்த கருத்து இருந்தால், தாம் பதவி விலகுவேன் என்று முன்பே கூறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.