உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் நடவடிக்கை! BASL வெளியிட்டுள்ள அறிக்கை
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்காக, அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பொதுவெளியில் வெளிவரும் செய்திகளை, BASL மிகுந்த கவலையுடன் கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், "1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகளாக இருந்து வருகிறது.
பொதுமக்களின் நம்பிக்கை
இந்த வயதை தன்னிச்சையாக மாற்றக்கூடாது என்றும், அத்தகைய மாற்றம் அவசியமோ விரும்பத்தக்கதோ அல்ல என்றும் சங்கத்தின் ஆழ்ந்த கருத்து" என BASL தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்வது, சட்ட அமைப்பின் நேர்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், சட்டத்தின் ஆட்சியையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதுகாத்து நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் இழக்க வழிவகுக்கும் என்று BASL குறிப்பிட்டது.
அந்தக் கடிதத்தின் மூலம், BASL மேலும் கூறியதாவது,
“2020 ஒக்டோபர் 29 அன்று சான்றளிக்கப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை (மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உட்பட) 12லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உட்பட) 11லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டது என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
இத்தகைய அதிகரிப்பின் காரணமாக, பணி ரீதியாக இந்த நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க உண்மையான தேவை இருக்க முடியாது.
உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமே செய்யப்பட வேண்டும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அரசியல் தேவை
பல ஆண்டுகளாக இலங்கையின் அரசியலமைப்பு, சில சமயங்களில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பல சமயங்களில் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றின் நலன்களுக்கு எதிராகவும் தற்காலிகத் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது” என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் BASL கூறியுள்ளது.
தற்போதைய சூழலில் இந்த நீதிமன்றங்களின் பதவியில் இருக்கும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது, நீதித்துறையில் தலையிடுவதற்கான அப்பட்டமான முயற்சியாகவே பொதுமக்களால் பார்க்கப்பட வாய்ப்புள்ளது என BASL தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் சுதந்திரமும், அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும், நமது குடியரசின் சட்ட ஆட்சிக்கும் ஜனநாயகக் கட்டமைப்புக்கும் இன்றியமையாத தூண்களாகும். அந்த வகையில், நீதித்துறையானது உண்மையில் சுதந்திரமாக இருப்பது மட்டுமல்லாமல், அது முற்றிலும் சுதந்திரமானதாகவும், பாரபட்சமற்றதாகவும், செல்வாக்கு, தயவு, இணக்கம் அல்லது முறைகேடு ஆகியவற்றின் மிகச்சிறிய அளவிலான உணர்விலிருந்தும் விடுபட்டதாகவும் பொதுமக்களால் பார்க்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது.
அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை உறுப்பினர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த முற்படும் எந்தவொரு முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தையும் முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயக ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்கு இன்றியமையாததான நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, கண்ணியம் மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி உரிய முறையில் கருத்தில் கொள்வார் என்று இலங்கை சட்டத்தரணிகள் பேரவை (BASL) தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அறிக்கை மேலும் கூறியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
