சுதந்திர தமிழீழம் என்பது இந்தியாவின் நலனிலேயே உள்ளது - உருத்திரகுமாரன் வலியுறுத்தல்
சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் நலனில் உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 21ஆம் திகதி டெல்லியில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாக, இந்த விடயங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் சர்வதேச அனுசரணையுடனான ஒரு வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்தேசியப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் எனவும் அதற்கு இந்தியாவே தலைமைதாங்க வேண்டும் எனவும் இக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் இதுவரை 13வது திருத்தம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், இதற்கு தமிழர்களின் சம்மதத்திற்காக காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லையெனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .
ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம்

மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்தகால இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் விளைவாக 300,000இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீ.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ பலம் மற்றும் பொருளாதார பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சமச்சீரற்ற உறவைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுக் களத்தை சமன் செய்ய இலங்கை மோசமான இராஜதந்திரத்தையும் போலித்தனத்தையும் பயன்படுத்துகின்றது.
இந்தநிலையில் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் இந்தியாவை சிக்க வைக்கும் இலங்கையின் நகர்வுகளை அனுமதிக்க வேண்டாம். எனவே 13வது திருத்தக்கயிற்றை இந்தியா அறுத்தெறிய வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட, ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கும் அதிபர் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுவதை உருத்திரகுமாரன் நினைவுப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம்
மேலும் சுதந்திர அரசிற்கு அமைதியான முறையில் குரல் கொடுப்பதைக் கூட தடைசெய்யும் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தின் காரணமாக, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்தும் நிலையில் இல்லை என்பதையும் உருத்திரகுமாரனின் கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.எனினும் இதனை பன்மைத்துவத்தின் ஆரோக்கியமான அடையாளமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது. எனவே இறுதி முடிவெடுப்பவர்கள் ஈழத் தமிழ் மக்களே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசத்தின் இறையாண்மை ஒவ்வொரு தமிழனிடமும் உள்ளது.எனவே, இந்தப் பன்மைத்துவத்தைப் போற்றும் வகையில், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான சரியான தீர்மானம் ஈழத் தமிழர்களிடையே இந்தியாவால் சர்வதேச ஆதரவுடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு மாத்திரமே என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது.
13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே என்பதை வெளிப்படையாக்கும்.
இது 35 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் உள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கைத் தலைவர்கள் பலர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், 13வது திருத்தம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதன் அடிப்படையில் இலங்கையின் மகாவம்ச சிந்தனையுடன் இணைந்து, 13வது திருத்தத்தை சிங்கள அரசியல் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர்களின் சம்மதம் தேவையில்லை.வரலாற்றின் இந்த மறுநிகழ்வு குறித்து, அல்பர்ட் என்ஸ்டீனை மேற்கோள் காட்டியுள்ள ருத்திரகுமாரன், பைத்தியம் என்ற வரையறை வேறு முடிவை எதிர்பார்த்து ஒரே காரியத்தை மீண்டும் மீண்டும் செய்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் அரசியல் செல்வாக்கு

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இந்தியா தனது செல்வாக்கு மண்டலத்தில் இலங்கையை தக்கவைக்க தொடர்ந்து சலுகைகளை அளித்து வருவதை உருத்திரகுமாரனின் கடிதம் மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.
1. 1954 நேரு-கொத்தலாவல ஒப்பந்தம், 1964 ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் 1974 சிறிமா-காந்தி ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவாக 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர், உகண்டாவிலிருந்து இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியது போன்றது. இலங்கையில் இந்தியாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர்.
2. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு சிறீமா-இந்திரா கடல் எல்லை ஒப்பந்தத்தின் விளைவாக, ராமநாட்டு ராஜாவின் ஜமீன்தாரியின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவை விட்டுக்கொடுத்து, தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய மீனவர்களின் பாரம்பரிய உணவு உரிமைகளை இலங்கைக்கு தியாகம் செய்தது என்ற இரண்டு விடயங்களை இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைகளாக ருத்திரகுமாரன் கோடிட்டுள்ளார் .
சிங்களக் குடியேற்றங்கள்

இந்தநிலையில் சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர் தாயகத்தில் இலங்கையின் ஆக்கிரமிப்புக் குடியேற்றம் இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கு விரோதமானது மற்றும் ஆபத்தானது என அவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரத்தின் போது, தீவின் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்கள் தொகை 1.2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.
இன்று கிழக்கு மாகாணத்தில் 29சதவீத சிங்களவர்கள் உள்ளனர் என்பதையும் உருத்திரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.