காணி உரிமைப் பிரச்சினை: அரசாங்கத்திடம் தொடர் கேள்வியெழுப்பும் ஜீவன்
மலையக சமூகம் இனி இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதில்லை என அரசாங்கம் கூறி வருகிறது, அதை உண்மையாக்கும் வகையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தை கேள்வியெழுப்பியுள்ளார்.
பண்டாரவளையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற மலையக சமூகத்துடன் தொடர்புடைய காணி உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவின் சமூக வலைத்தள பதிவுக்கு ஜீவன் தொண்டமான் பதிலளித்து பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
விளம்பரம் எதற்கு
மேலும், ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 12 ஆம் திகதி உண்மையில் ஒப்படைக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கையை கௌரவ பிரதி அமைச்சரால் கூற முடியுமா?
நான் அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட 237 உரிமைப்பத்திரத்தை தவிர, இந்த அரசாங்கத்தின் கீழ் எத்தனை புதிய உரிமைப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன?
2,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் பயனாளி தேர்வு கடிதங்களாக இருந்தன. அப்படி இல்லாதபோது, இந்த நிகழ்வு வீட்டுரிமை வழங்கும் விழாவாக விளம்பரப்படுத்தப்பட்டது ஏன்?” எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தவும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பதில்
அண்மையில் மலையக மக்களுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வை தொடர்ந்து, அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் மலையக அரசியல்வாதிகள் பலரும் தத்தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த கருத்துக்களுக்கு அரசாங்க தரப்பிலிருந்து பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
