குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை: எஞ்சிய பகுதியை ஸ்கேன் செய்ய நீதிமன்றம் உத்தரவு
1990 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பிய காத்தான்குடி முஸ்லிம்கள் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, நேற்று (20.04.2026) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கில் பிரசன்னமாகிய சட்டத்தரணி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மனிதப் புதைக்குழி
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான இந்த மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (20.04.2026) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலே கடந்த 31.03.2026 அன்று, இந்த வழக்கினுடைய பிரத்தியட்ச முறைப்பாட்டாளர் நீதிமன்றில் நகர்த்தல் பிரேரணை வாயிலாக அணுகி, அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களிலே இரண்டு இடங்கள் மாத்திரம் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஒரு இடம் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அந்த குறித்த பிரதேசத்தைச் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் அதனை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்குரிய கட்டளையை வழங்குமாறும் நீதிமன்றை வேண்டி இருந்தார்.
அதன் அடிப்படையில், குறித்த அந்த ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த வழக்கினுடைய பிரத்தியட்ச முறைப்பாட்டாளர் தனது சொந்தச் செலவில் தனியார் நிறுவனம் ஒன்றை அணுகி ஆடியோ ஃப்ரீக்குவன்சி மெக்கானிக் டெலிவரி (Audio Frequency Mechanic Delivery) எனும் ஸ்கேன் பரிசோதனை முறையைப் பின்பற்றி ஸ்கேனிங் செய்யப்படாத பிரதேசத்தைச் சோதனைக்கு உட்படுத்துவதற்கும் அதன் பின்னர் அங்கே ஏதாவது எச்சங்கள் காணப்படுமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இன்று நீதிமன்றில் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
சொந்தச் செலவினம்
குறித்த இந்த வழக்கிலே சட்ட வைத்திய அதிகாரி, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு என வழக்கோடு தொடர்புடைய சகல தரப்பினருக்கும் அறிவித்தல் அனுப்பப்பட்டிருக்கின்றது.
அந்த வகையிலே அடையாளம் காணப்பட்டு ஸ்கேனிங் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத அந்தப் பிரதேசத்திலே எதிர்வரும் மே மாதம் 14, 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஸ்கேனிங் நடவடிக்கைகள் மற்றும் ஏதாவது எச்சங்கள் இருக்குமாக இருந்தால் அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த வழக்கிலே குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த வழக்கின் பிரத்தியட்ச முறைப்பாட்டாளரின் சொந்தச் செலவினத்திலேயே மேற்கொள்வதற்கு நீதிமன்று அதற்குரிய கோதாவினை ஆக்கி இருக்கின்றது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதி அழைக்கப்பட இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |