முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் கத்திமுனையில் கொள்ளை
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொள்ளைக்கும்பல் ஒன்று கத்திமுனையில் திருடிச்சென்றுள்ளதாக ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீட்டுடன் வணிக நிலையம் வைத்து தொழில்செய்துவந்த வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் நுளைந்த கொள்ளைக்கும்பல், வயோதிபர்களை தாக்கி, காயப்படுத்திவிட்டு கத்திமுனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்த 32 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்த 7 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 2.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 60 அகவையுடைய வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை தலைமையக அதிகாரிகள் மற்றும் தடையவியல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
