திருகோணமலையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நில அபகரிப்பு முகவர்களின் தடைகளுக்கு மத்தியில், இலங்கை துறைமுக அதிகார சபை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அடையாளம் காணப்பட்ட 790 ஹெக்டயர் நிலங்களை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
1979ஆம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபை நிறுவப்பட்டபோது, துறைமுக ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிலங்களும் சட்டரீதியாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு மாற்றப்பட்டுள்ளன.
எனினும், திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றியிருந்த நிலங்கள் மிகவும் குறைவாக இருந்ததால், 1984ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி மூலம், துறைமுக அமைச்சரின் அதிகாரத்தின் கீழ், நில அமைச்சரின் ஒப்புதலுடன், சுமார் 2255 ஹெக்டயர் அரச நிலங்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டன.
தொழில்துறை அபிவிருத்தி
தற்போது, திருகோணமலை துறைமுகத்தை தொழில்துறை துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

இதற்காக, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான நிலங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கு நில பயன்பாட்டு முதன்மைத் திட்டம் (Land Use Master Plan) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம், 'Sabana Jurong' அபிவிருத்தித் திட்டம் மற்றும் தேசிய துறைமுக அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தும் வேளையில், துறைமுக நிலங்களில் சட்டவிரோதமாக பயிரிடும் குழுக்களால் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரச நிலங்கள்
இதனைத் தொடர்ந்து, அரச நிலங்கள் (மீட்பு) சட்டத்தின் கீழ் இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இவை அனைத்தையும் விசாரித்த நீதிமன்றங்கள், இலங்கை துறைமுக அதிகார சபையின் நில உரிமையை அங்கீகரித்து, உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை தள்ளுபடி செய்தன.
இதற்கிடையில், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் ஒரு பகுதி, சில முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
திட்டப் பணிகள்
இந்த முதலீட்டாளர்கள் தற்போது திட்டப் பணிகளை ஆரம்பித்துள்ள போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் பல்வேறு தொந்தரவுகளும், தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், திருகோணமலை பிரதேச செயலகத்துடன் இணைந்து, சுமார் 790 ஹெக்டயர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு, இவற்றை சட்டரீதியாகவும் முறையாகவும் மக்களுக்கு வழங்குவதற்கு ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அழிவு சக்திகளின் தடைகளுக்கு மத்தியில், இலங்கை துறைமுக அதிகார சபை தனது அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், அடையாளம் காணப்பட்ட 790 ஹெக்டயர் நிலங்களை மக்களுக்கு வழங்குவதற்காக அரசுக்கு விடுவிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.