நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்!
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாளத்துக்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்தாக சிறிலங்கா காவல்துறை ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குளியாபிட்டிய - நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறு குழந்தை மீது மகிழுந்து மோதியதில் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கிடலாவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளி விபத்து

இதேவேளை, நுவரெலியா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது பாதசாரிகள் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்ல - வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதியதில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் பெரியதுத்துவரம் பாலத்திற்கு அருகில் உந்துருளி வீதியை விட்டு விலகி உருண்டு விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.
மரத்தில் மோதியதில் விபத்து

இதேவேளை, இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியின் படுகெதர பிரதேசத்தில் உந்துருளி வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த சாரதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெல்லவாய - தனமல்வில வீதியில் தெள்ளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த வானின் சாரதி உயிரிழந்துள்ளார்.