லிடியன் நாதஸ்வரத்தின் குறளிசைக் காவியம் பாகம் 02 யாழில் வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றையதினம் (10) இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
திருக்குறளின் 1,330 குறள்களையும், அவற்றின் பொருள்களையும் சகோதரர்கள் இருவரும் இணைந்து இசை அமைத்து பாடல்களாக வழங்கியுள்ளனர்.
வெளியிடப்பட்ட படைப்பு
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், அதாவது லிடியன் நாதஸ்வரத்துக்கு 9 வயதும், அமிர்தவர்ஷினிக்கு 12 வயதும் இருக்கும்போது இந்த பணி ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது 10 வருடங்கள் கடந்த பின்னர் அவர்களது படைப்பு வெளியிடப்பட்ட நிலையில் பலரும் அதற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதாவது தேனிசை தென்றல் தேவா, உன்னிமேனன் மற்றும் இலங்கையில் இருந்தும் 25இற்கு மேற்பட்ட பாடகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் இந்த படைப்பில் பாடியுள்ளனர்.
பலர் வாழ்த்து தெரிவிப்பு
இதன் முதல் வெளியீடு தமிழகத்தில் இடம்பெற்ற நிலையில் இரண்டாவது வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த படைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான், வைகோ, திருமாவளவன் உட்பட பலர் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.
பாகம் 02 வெளியீட்டின் முதல் இறுவட்டினை யாழ். இந்திய துணை தூதுவர் சிறீமான் சாய் முரளி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஏனைய இறுவட்டுகளை தமிழ்த்துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ். தமிழ்ச்சங்க செயலாளர் லலீசன், பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சன் ஆகியோர் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




