மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கையூட்டல், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து விபரப் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ஆணைக்குழு எச்சரிக்கை
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ளதைக் குறிப்பிட்ட ஆணைக்குழு, ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு மேல் மேலதிக காலம் வழங்கப்படமாட்டாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவைத் தவிர, ஏனைய பல முக்கிய அரசியல்வாதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை (03) இவ்வாறான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 12 நாட்களுக்குள் தமது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் விபரங்களை வழங்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |