வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம்
உயர்தரப் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்குப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தாலும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எந்தத் தயார் நிலையிலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தபட்சம் விண்ணப்பப் படிவம் அடங்கிய கையேட்டை அச்சிடுவதற்குக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்தோடு அச்சிடுவதைத் தவிர்த்து இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்குவதற்குக் கூட அந்தக் கையேடு இதுவரை தயாரித்து முடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைத் திணைக்களம்
குறித்த விடயத்தை ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கையேடு தயாரித்து முடிக்கப்பட்டிருந்தால் பரீட்சை முடிவுகள் வெளியான உடனேயே அதனை ஆணைக்குழுவின் இணையதளத்தில் பதிவேற்றியிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அனைத்து அறிவுறுத்தல்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, குறித்த அனைத்து விபரங்களும் இந்தக் கையேட்டிலேயே இடம்பெறுகின்றன.
ஏனைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் முடிவுகள் வெளியிடப்படும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களம் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
இருப்பினும், விண்ணப்பங்களைக் கோர முடியாமல் போன இந்த நிலைமைக்கு நிர்வாகத்தில் நிலவும் கடும் மந்தகதியே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முடிவுகள் வெளியான மறுநாளில் இருந்து விண்ணப்பங்களைக் கோருவதே இதற்கு முன்னர் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையாகும்.
வசதிக்குறைபாடுகள்
இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்குவது குறித்து கடந்த நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதிலும், சில பகுதிகளில் நிலவும் வசதிக்குறைபாடுகள் காரணமாக அந்தப் பகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் என்ற அடிப்படையில் கையேட்டை அச்சிட்டு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கையேட்டை அச்சிட்டுப் பெறுவதில் தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் இந்த மாத இறுதிக்குள் கூட விண்ணப்பங்களைக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கையேட்டை அச்சிடுவதற்கு குறைந்தபட்சம் மூன்று வார காலமாவது தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும்.
உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து கடந்த காலம் முழுவதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அந்த நிலைமையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரியவும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |