மே18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஆத்மசாந்தி பிரார்த்தனைக்கு அழைப்பு
2009 இல் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் போது உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் வழிபாடும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியில் உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ள ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஏற்பாட்டாளர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்திலே முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்காண அப்பாவி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கான நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.
தமிழினப்படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை மறுதினம் (18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.

இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் வருடம்தோறும் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே முன்னெடுக்கப்படும்.
அந்தவகையில் இம்முறையும் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் குறித்த இடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
சுடரேற்றி அஞ்சலி
காலை ஆறு மணி முதல் ஒன்பது முப்பது வரை ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்க்கடன் வழிபாடும் இடம்பெற்று பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்காக குறித்த நிகழ்வு நிறுத்தப்படும்.

பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நிறைவடைந்ததும் மீளவும் குறித்த இடத்தில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இடம்பெறும்.
குறித்த கிரியைகளுக்காக பொதுமக்கள் எந்தப் பொருட்களையும் கொண்டுவரத் தேவையில்லை எனவும் உரிய நேரத்தில் வருகைதந்து உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாட்டிலும் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் கலந்து கொள்ளுங்கள்” என தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |