ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
சிறிலங்காவின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (செப்டம்பர் 01) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் ஊழல் எதிர்ப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
300 மில்லியன் டொலர்களை வழங்க
அத்துடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் 5 வருடங்களுக்கான புதிய ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் ஊடக 300 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் சபை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அபிவிருத்திப் பங்காளராக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தொடர்ந்தும் வழங்கிவரும் ஆதரவுகள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நன்றிகளைத் தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்
அதற்கு மேலதிகமாக, சிறிலங்காவின் சட்டவாக்க செயன்முறை, தேர்தல் முறைமை, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மற்றும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பன தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இங்கு விளக்கமளித்தார்.
