மரண ஓலத்தில் மொரோக்கோ..! ஆயிரக்கணக்கை தாண்டியுள்ள உயிரிழப்புக்கள் (படங்கள்)
ஆப்ரிக்க நாடான மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை சுமார் 2,059 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மராகேஷ் நகரின் தெற்கு பகுதிகளில் வாழும் மக்களே பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து மொரோக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் முகமது மூன்று நாட்கள் தேசிய துக்கத்தையும் அறிவித்துள்ளார்.
6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
உயிர் பிழைத்தவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்க அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு வரும் நிலையில், பலர் தங்களின் இரண்டாவது இரவையும் பொது வெளியிலேயே கழித்து வருகின்றனர்.
6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் மராகேஷ் உட்பட பல நகரங்களை பாதித்துள்ளது.
சில மலைப்பாங்கான பகுதிகளில் முழு கிராமங்களும் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலா உலக பாரம்பரிய நகரமான மராகேஷில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மொரோக்காவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திற்கு பல நாட்டு தலைவர்கள் தமது இரங்கல்களை தெரிவித்ததோடு பலதரப்பட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.



