கோரவிபத்தில் சிக்கி தாயும் மகனும் பலி
அரச பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய மகனும், 62 வயதுடைய தாயுமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை சம்பவம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை, பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தின் பின் சில்லில் சிக்கி இருவரும் படுகாயமடைந்ததை அடுத்து கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், கொகரெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

