ஐந்து பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை..! (படங்கள்)
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹோல்றீம் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை, சின்ன நாகவத்தை தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் சத்தியபாமா (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நகைகள் காணாமல்போயுள்ளன
இவர், சின்ன நாகவத்தை தோட்டத்திலிருந்து கடந்த 16 ஆம் திகதி, லிந்துலை ஹோல்றீம் தோட்டத்தில் உள்ள தனது மருமகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல்போயுள்ளன.
எனவே, நகைகளை பறிக்கும் நோக்கில் அவரை எவராவது கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மகள், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் வசிக்கும் மேற்படி வீட்டில் சம்பவம் இடம்பெற்றவேளை, எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும், தாயின் காது, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.
ஹோல்றீம் தோட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மேற்படி வீட்டைச் சேர்ந்த சிறுமி, இன்று (21) காலை தண்ணீர் பருக வீட்டுக்கு வந்திருந்த வேளையில் வீட்டில் இரத்த வெள்ளத்துடன் தனது பாட்டி கிடந்ததை அவதானித்து கூச்சலிட்டுள்ளார்.
விசேட குழு அமைத்து விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயலவர்கள், லிந்துலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதவானின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் லிந்துலை காவல்துறையினர் விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
