ராமேஸ்வரம் அருகே மர்மப் பொருள் மிதந்து வந்ததால் பரபரப்பு (படங்கள்)
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்மப் பொருள் கடலில் மிதந்து வந்து இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் கரையொதுங்கிய மர்மப் பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணை

மிதந்து வந்த மர்மப் பொருளின் உள்ளே பல்வேறு வகையான புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அந்தச் சிலைக்கு பச்சை அரிசி, நெல் உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு பூஜை செய்து பரிகாரம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
கடற்கரையில் குவிந்த பொது மக்களை காவல்துறையினர் அகற்றி மிதந்து வந்த மர்மப் பொருள் எங்கிருந்து வந்தது? வேறு ஏதேனும் கடத்தல் பொருட்கள் வந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தமத திருவிழா
இருப்பினும், மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இது போன்ற தெப்பங்கள் புத்தமத திருவிழாக்களின் போது தயாரித்து கடலில் விடப்படுவது வழக்கமாக உள்ளது.
படகில் எழுதப்பட்ட பர்மிஸ் எழுத்துகளைக் கொண்டு இந்த தெப்பம் மியான்மர் நாட்டில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து வங்கக் கடலில் நீரோட்டத்தின் மூலம் தெப்பம் திசை மாறி ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


