மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் - ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரசாயனங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”கெஹெல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், மித்தெனிய - எம்பிலிப்பிட்டிய வீதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இரண்டு கொள்கலன்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் விநியோகிக்கும் வலையமைப்பு
பெக்கோ சமனின் அறிவுறுத்தலில் மித்தெனிய பகுதியை சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர் மற்றும் அவரின் சகோதரர் ஒருவரும் குறித்த கொள்கலனை அவர்களின் சகோதரியின் வீட்டில் மறைத்து வைத்துள்ளனர். குறித்த காணி அவர்களுக்கு சொந்தமான பேருந்துகள் கழுவும் இடமாக பாவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாங்கள் முறையான விசாரணைகளை செய்து கொண்டிருக்கிறோம். இச்சந்தர்ப்பத்தில் பல அரசியல் வாதிகள் முதுகலை படிப்பு அல்லது சுகாதார காரணங்களைக் கூறி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மற்றவர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர்.
நாம் முதலில் குறிப்பிட்ட குறித்த இரு அரசியல்வாதிகள் தான் ஐஸ் போதை பொருட்களை நாட்டில் விநியோகிக்கும் வலையமைப்பை நடத்தியுள்ளனர். தகுதி பாராமல் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
