கற்பிட்டியில் கைப்பற்றப்பட்ட 530 கிலோக்கிராம் பீடி இலைகள்
கற்பிட்டி பெரிய அரிச்சல் தீவில் நேற்றைய தினம்(14) மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 530 கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை வைத்திருந்த இருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்கா கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் முகமாக மேற்கோள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெற்றது.
16 பொதிகள்

இதன்போது படகில் அடைத்து வைத்திருந்த16 பொதிகளை சோதனையிட்ட போதே பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பீடி இலைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 30 மற்றும் 44 வயதுடைய கற்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட படகு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உள்ளடங்கலாக அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.