நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய நண்பர்களும் உயிரிழப்பு -நேபாள விமான விபத்து துயரம்
நேபாள விமானத்தில் பயணித்து உயிரிழந்த சில பயணிகள் குறித்து உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகி பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அனிக்காட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மேத்யூ பிலிப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நேபாளத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரியவருகிறது.
புற்று நோயால் உயிரிழந்த நண்பன்

இதனைத் தொடர்ந்து அவர் கேரளா வந்துள்ள நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், அண்மையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்ததும் நேபாளத்தில் பிலிப் இருந்த போது அவருக்கு பழக்கமாக இருந்த நண்பர்களான ராஜு தாக்குரி, ரபின் ஹமால், அனில் ஷாஹில், ஷரன் ஷாய் மற்றும் சுமன் தாப்பா உள்ளிட்டோர் அவரது மரண செய்தி அறிந்து கேரள மாநிலம் வந்துள்ளனர்.
இறுதி சடங்கிற்கு கேரளா வந்த நண்பர்கள்

மேத்யூ பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவர்கள் ஐந்து பேரும் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ராஜு, ரபின் மற்றும் அனில் ஆகிய மூன்று பேர் மட்டும் பொக்காராவுக்கு விமானம் மூலம் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி அவர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்க மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்து போயினர்.
நண்பரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய மூன்று பேர் பரிதாபமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தமை, பத்தனம்திட்டா பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.